Tuesday 18 October 2016

சட்டத் திருத்தம் - ஏரிகளில் வண்டல் மண் எடுக்கலாம்

முற்காலங்களில் ஏரி, குளங்கள் வற்றும்போது அந்தந்தப்பகுதி விவசாயிகளே நீர்நிலைகளில் உள்ள வண்டலை எடுத்து வயல்களில் இட்டுக்கொள்வர். இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தது. நிலங்களும் வளமாயின. காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, நீர்நிலைகளில் உள்ள மண்ணை அரசே எடுத்துக்கொள்ளும் முறை வந்த பிறகுதான்... நிலைமை தலைகீழாக மாறியது. முறையாகத் தூர் வாரப்படாததால் நீர்நிலைகள் தூர்ந்துபோனதோடு, வண்டல் மண்ணை விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலைமையும் உருவானது. 

இந்நிலையில் அரசு விதியைப் பயன்படுத்தி, பழைய முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குறிச்சி கிராம மக்கள். மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று, தங்கள் ஊர் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை தாங்களே எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர், இந்தக் கிராம மக்கள். இதற்கு முன் முயற்சி எடுத்தவர், சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா. 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ரமேஷ் கருப்பையா, “ஏரி, குளங்கள்தான் விவசாயத்துக்கு ஆதாரமானவை. அவற்றை முறையாகத் தூர்வாரி வந்தால், ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமிக்க முடியும். தூர்வாரும் போது கிடைக்கும் வண்டலைப் பயன்படுத்தி, நிலங்களை வளமாக்க முடியும். வண்டல் மண்ணை வயலில் கொட்டும்போது, வயல் வளம் பெறும். ஆனால், சிறு கனிமங்கள் என்ற பட்டியலில் ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணையும் வகைப்படுத்தி, விவசாயிகள் வண்டல் எடுக்க அரசு தடைவிதித்தது. இதனால், விவசாயிகளுக்கு ஏராளமான இழப்புகள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் தூர்ந்து கிடக்கின்றன. அதனால், பாசனத்தை இழந்து... ஏராளமான நிலங்கள் தரிசாக மாறிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், ‘வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என சில ஆண்டுகளாக விவசாய சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.

"""திருமானூர் : திருமானூர் அருகே  மாட்டு வண்டியில் மனிதர்களை பூட்டி, ஏரியில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர். 1959ம் ஆண்டு சிறு கனிம விதி சட்டம் உட்பிரிவு 6ன் படி ஏரி மற்றும் குளம், ஆறுகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் அனுமதியின்றி எடுத்து பயன்படுத்தலாம். ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 10 யூனிட்டுக்கு மேல்  விவசாயிகள் மண்ணை அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்த விதியை ரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் மண் வளம் காக்க  அனைத்து ஏரி, குளங்களிலும் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள  அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த  கண்டராதித்த சோழன் பெரிய ஏரியில் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போராட்டம் நடத்தினர்."""

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது தமிழக அரசு. ஒரு தனிநபர் விவசாயத் தேவைக்காக, 30 கன மீட்டர் வரை இலவசமாக வண்டல் எடுத்துக்கொள்ள கட்டணம் இல்லை. அதற்கு மேல் கட்டணம் செலுத்தி, வண்டல் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில்தான் கடந்த மே மாதம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் கோரிக்கை வைத்தோம். ‘புதுக்குறிச்சி நம்மாழ்வார் நற்பணி மன்ற’த்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வமாக இருந்தனர். 

அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். புதுக்குறிச்சி ஏரியில் இங்குள்ள விவசாயிகள் 300 கன மீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலை கட்டணம் இல்லாமலும்; அதற்கு மேல் ஒரு கன மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தியும் எடுத்துள்ளனர். இதனால், ஏரியின் ஒரு சிறுபகுதி மட்டும் தூர் வாரப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் இருந்து வண்டல் எடுத்து பலன் பெற முடியும். வண்டல் எடுக்க விருப்பப்படும் விவசாயி முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தப் பகுதியில் எவ்வளவு வண்டல் எடுக்கலாம் என ஆய்வுசெய்து அனுமதி அளிப்பார்கள். விவசாயி மனு அளித்த 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

புதுக்குறிச்சி நம்மாழ்வார் நற்பணி மன்றத் தலைவர் தனபால், “விளைநிலங்களில் வண்டல் பயன்படுத்தினால், மண் வளமாக மாறுவதோடு மட்டுமில்லாமல், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். மேல் மண்ணின் காற்றோட்டத் தன்மையும் அதிகரிக்கும். அடுத்த மூன்று மாதங்களில் ஏரி, குளம், கண்மாய், ஊருணிகளில் வண்டல் எடுத்தால், வடகிழக்குப் பருவமழை மூலம் நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் சேமிக்க முடியும்” என்றார்.

தொடர்பு கொள்ள..
புதுக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம். தனபால்-9095941127.

No comments:

Post a Comment