Wednesday 1 March 2017

நீர் போராட்ட கதைகள் - ராஜேஷ் நாயக்

'இது விளையாத நிலம்... முழுவதும் செம்பாறைகளும், கடுமையானக் கற்களும் நிறைந்தது. இதில் விவசாய முயற்சிகள் எடுப்பது வெறும் வீண் வேலை!”  - இவைதான் இரண்டாண்டுகளுக்கு முன்னால் ராஜேஷுக்கு, ஊர்க்காரர்கள் கொடுத்த உற்சாக வார்த்தைகள். இன்று, 50 அடி ஆழத்தில் ஒரு மாபெரும் ஏரியை உருவாக்கி, 120 ஏக்கர் நிலத்தை இயற்கை வேளாண்மை மூலம் பொன் விளையும் சொர்க்கபுரியாக மாற்றியிருக்கிறார், ராஜேஷ் நாயக்.

கர்நாடக மாநிலத்திலுள்ள, மங்களூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, ஒட்டூர். இங்குதான் ராஜேஷுக்குச் சொந்தமான செம்பாறை நிலம் உள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் பாறை நிலப்பரப்பாக இருந்த இந்த பூமி, இன்று இந்தியாவிற்கே ஒரு வேளாண் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்பது, ஒரு தனிமனிதனின் உறுதிக்கும், உழைப்பிற்கும் உள்ள வலிமையின் எடுத்துக்காட்டு.

"அடிப்படையிலேயே, நான் விவசாயப் பரம்பரையைச் சார்ந்தவன். இந்த நிலம் எங்கள் பரம்பரைச் சொத்து. ஆனால் காலப் போக்கில் இது ஒன்றும் விளையாத நிலம் என்று இதை என் முன்னோர்கள் கைகழுவிவிட்டனர். அதற்குக் காரணம் இந்த நிலத்தில் பாறைகளின் ஊடுருவல். பாறைகள் நிறைந்திருப்பதால் இந்த நிலத்தில் எந்தப் பயிரின் வேராலும் நீரிழுக்க முடியாது. இதை அறிந்துகொண்ட போதுதான், இந்த நிலத்தின் முதல் தேவை ஒரு நீராதாரம் என்பது எண்ணத்தில் உதித்தது. முதலில் இங்கு ஒரு நீராதாரத்தை உருவாக்க வேண்டும் என்று நான் சொன்னபோது, அனைவரும் சிரித்தனர். நான் என் வேலையை விட்டுவிட்டு இந்த முயற்சியில் இறங்குவது தேவையற்ற ஆபத்தை வலிய இழுத்துவிட்டுக் கொள்வதாகும் என்றனர். நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. என் மனதின் குரலை மட்டுமே கேட்டுச் செயல்பட்டேன்" என்கிறார் ராஜேஷ்.

தொடர்ந்து அவர், "அதே சமயம் நீரை இந்த நிலத்திற்குள் செலுத்துவது, அசாத்தியமான ஒன்றாக இருந்தது. எனவேதான் இந்த ஏரியை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். பல்வேறுபட்ட சிக்கல்களோடு, நிதிச் சிக்கலும் பெரிதாகவே இருந்தது. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு, மண்ணின் மீது நம்பிக்கை வைத்து இந்த ஏரியை அகழ்ந்தெடுத்தேன். இன்று இது 40,000 லிட்டர் தண்ணீருக்கும் மேல் கொள்ளளவு கொண்ட ஏரியாக உருவெடுத்து நிற்கிறது" என்று மார்தட்டுகிறார் ராஜேஷ்.



“என் நிலத்திற்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டுமன்றி, அருகிலுள்ள அத்தனைப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் உறுதுணையாக இந்த ஏரி இருந்து வருகிறது. இதனால் இந்த ஏரிக்கு நேரெதிரில் இதைப்போலவே மற்றொரு ஏரி அமைப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டேன்” என்று பூரிக்கிறார் ராஜேஷ்.

இயற்கை வேளாண்மை என்றாலே வயலோடு சேர்த்து முதலில் நினைவுக்கு வருவது மாடுகள் தானே? மாடுகளைப் போல ’மாடல்ல மற்றை யவை’ அல்லவா உழவர்களுக்கு! எனவேதான் தன் விவசாயத்தோடு சேர்த்து, 200 மாடுகளையும் வாங்கி மாட்டுப்பண்ணையை அருகிலேயே வைத்திருக்கிறார் ராஜேஷ். தன் நிலத்திலேயே, இவற்றின் தீவனத்தையும், புல் வகைகளையும் வளரவைத்திருக்கிறார். மொத்தத்தில் 800 லிருந்து 1000 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்கிறார். இந்தப் பாலை, கர்நாடக மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் கொள்முதல் செய்து கொள்கிறது.

இவரது வயலையும் பண்ணையையும் பார்த்தால், இது இரண்டாண்டுகளுக்கு முன் வறண்ட பூமியாக இருந்ததென்பதை நிச்சயம் நம்பமுடியாது. ஏரிக்கரையில் நடந்து கொண்டே அடுத்தடுத்த ஆச்சர்யங்களை விவரிக்கிறார் ராஜேஷ்.

’மாடுகள் தரும் பாலை, விற்றுவிடுகிறோம்; ஆனால் அதன் மற்ற வெளியேற்றங்களை என்ன செய்வது என்ற சிந்தனைதான் இந்த மின்னுற்பத்திக்கான மூலம்’ என்று வியப்பைக் கூட்டுகிறார். ’மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும், தண்ணீருடன் கலந்து, ஒரு பெரிய சேமிப்புக் கிடங்கில் ஊற்றி விடுகிறேன். இது இயற்கையாக காற்றிலுள்ள நுண்ணுயிரிகளுடன் கலந்து நொதித்துப் பொங்கும். அவ்வாறு நொதிக்கும் போது அதிலிருந்து மீத்தேன் வாயு வெளியேறும். அத்தகைய மீத்தேனை, சுற்றுப்புறத்தில் கலக்க விடாமல், ஒரு ராட்சதக் கூரையில் மடக்கி அந்த மீத்தேனை எரிவாயுவாகப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்கிறேன். இதன் மூலம் 60 கிலோவாட் வரை மின்சாரம் தயாரிக்க முடிகிறது. இந்த மின்சாரத்தை வைத்துத்தான் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுகிறேன்" என்று சொல்லுகிறார் இந்த விஞ்ஞான வேளாளர்.




ஏரியிலிருந்து நீர், நீரிலிருந்து பயிர்களும் தீவனமும்; தீவனத்தை வைத்து மாடுகள், மாடுகளிடமிருந்து பாலும், எரிவாயுவும்; எரிவாயுவை வைத்து நீர்ப்பாய்ச்சல் என ஒரு முழு விஞ்ஞான சுழற்சி முறையில் விவசாயம் பார்க்கும், ஆச்சர்ய மனிதராக நம் கண்முன் உயர்ந்து நிற்கிறார் ராஜேஷ் நாயக்.



"இது மிகவும் பயன்தரத்தக்க விவசாய அணுகுமுறை. இதை நாடெங்கும் அமல்படுத்தினால் நம் தண்ணீர் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். 100 ஏக்கர் நிலத்திலேயே இவ்வளவு பயன் சாத்தியப்படும் போது, இந்தியாவிலுள்ள 400 மில்லியன் ஏக்கர்களில் இந்த முறை கையாளப்பட்டால் எவ்வளவு நன்மை தரும்? என்ற கேள்வி என்னைத் துளைத்துக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் சுற்றுவட்டார கிராமங்களில் வேளாண் விரிவுரைகள் நிகழ்த்துகிறேன். இரண்டாவது ஏரியையும் இப்போது பொதுமக்களின் துணையோடு சிறுநில விவசாயிகளே தூர்வாரிக்கொண்டிருக்கிறோம்" என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் ராஜேஷ், urajeshnaik.com என்னும் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார் என்பது வியப்பின் உச்சம்.

தண்ணீர் பற்றாக்குறையையும், நதிகளின் பின் நடக்கும் அரசியலையும் எண்ணி நொந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, ராஜேஷ் நாய்க் போன்ற விவேக விவசாயிகள், ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தானே!

Sunday 23 October 2016

நீர் போராட்ட கதைகள் - ராஜபாளையம் நர்மதா

சென்னை அண்ணா நகர் திருவல்லீஸ்வரர் காலனி மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நர்மதா(38). இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர்.

எம்.ஏ., எம்.பில்., பொருளாதாரம் படித்த நர்மதா, சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு வேலையை விட்டுவிட்டு, பொது சேவையாற்ற விரும்பியுள்ளார்.



கடந்த 26-ம் தேதி அம்பத்தூர் ஏரிக்குச் சென்ற நர்மதா, அங்கு செடி கொடிகள் மண்டி, தண்ணீர் செல்ல வழியில்லாமல் இருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக, தனி ஆளாக களத்தில் இறங்கி, அங்கு மண்டிக் கிடந்த செடி, கொடிகளை அகற்றியுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் அந்த ஏரியை தாங்களே சுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளனர். தனது முயற்சிக்கு உடனடி பலன் கிடைத்ததால் உற்சாகமடைந்த நர்மதா, மற்ற இடங்களிலும் இதேபோல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பியுள்ளார்.

இதையடுத்து, நேற்று பேருந்தில் தஞ்சாவூருக்கு வந்த நர்மதா, நகரின் நுழைவுப் பகுதியான கொடிமரத்து மூலை அருகே, தஞ்சாவூர் பெரிய கோட்டை அகழியில், ஆகாயத் தாமரை மற்றும் செடிகள் மண்டிக் கிடப்பதை பார்த்துள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய நர்மதா, தனி ஆளாக அவற்றை அகற்றத் தொடங்கினார். பொதுமக்கள் திரண்டு ஆர்வத்துடன் பார்த்தனர். பலரும் பாரட்டினர்.

இதுகுறித்து நர்மதா கூறும்போது, “நான் பிறந்தது சென்னை. எனது கணவரின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சொக்கலிங்கபுரம். ராஜபாளையம் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர். அங்கு தண்ணீருக்காக மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதன் தாக்கம் என்னைத் தொடர்ந்தது. எனவே, நீர்நிலைகளை காக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த மாதம் அம்பத்தூர் ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன். அதைத் தொடர்ந்து, நேற்று தஞ்சாவூர் அகழியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டேன். இது மோசமான நிலையில் உள்ளது. கழிவு நீர் தேங்கி, கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டினாலும், தூய்மைப் பணிக்கு யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதைச் செய்கிறேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு ஊருக்குச் செல்வேன். அடுத்ததாக, வேறு ஊரில் எனது பணியை தொடர்வேன்.

தமிழகத்தில் உள்ள 39,400 ஏரி, குளங்களில், பாதிக்கு மேல் இதேபோன்ற நிலையில் உள்ளன. வெறுமனே ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதை விட, களத்தில் இறங்கினால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்கிறார் நர்மதா.

நன்றி: தமிழ் ஹிந்து நாளிதழ் 

சட்டங்களும் தீர்ப்பும்-கொரட்டூர் ஏரி தீர்ப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் வரிகள்.. ஒவ்வொரு ஏரி குளத்தையும் மீட்க நம்பிக்கையூட்டும் வரிகள்..

25 ஆண்டுகளாக அவர்கள் வசம் இடம் இருந்தாலும், அவர்களுக்கு எந்த உரிமையும் வந்து விடாது; அவர்கள், ஆக்கிரமிப்பாளர்களாகத் தான் கருதப்படுவர். நீர்நிலைகளிலிருந்து ஆக்கிரமிப்புக்களையும் அரசு உடனே அப்புறப்படுத்தவேண்டும். அப்படி அப்புறப்படுத்தும்பொழுது எந்த வகையான நஷ்ட ஈட்டையும் அரசு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ கொடுக்க தேவை இல்லை. அப்படி நஷ்டஈடு கேட்பதற்கு ‘ஆக்கிரமிப்பாளர்களுக்கு’ எந்த விட உரிமையும் இல்லை.

நீண்ட நாட்களாக நீர்நிலைகளை ‘ஆக்கிரமித்து’ குடியிருந்து வருபவர்களுக்கு அரசு இதுவரை பட்டா, அப்ரூவல் என எந்த அனுமதி கொடுத்திருந்தாலும், அவை செல்லாது. அப்படி அனுமதி கொடுத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.    

நீர் நிலைகளை பாதுகாக்கும் சட்டத்தை மறந்து விட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கை ஆதாரங்களை அரசு மறைக்கும் போது, அரசுக்கு எதிராக, மக்கள் கையை உயர்த்துகின்றனர்

ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைகளை மீட்கும் படி, 2005 ஜூனில், உயர் நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. அதிகாரிகளின் தவறால், உயிரிழப்பும், நிதி இழப்பும், 2005 அக்டோபரில் ஏற்பட்டது.

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்கு, தவறான நிர்வாகமும், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறையும் தான் காரணம்.

நீர் நிலைகளை காக்கும் நோக்கிலும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் சட்டம், 2007ல் கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கில், ஏரிக்குள் நீண்டகாலமாக இருப்பதாக கூறுவதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கபடவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த இடத்தில் அவர்களுக்கு உரிமை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி கொள்ள கடந்த 2006ம் ஆண்டு அரசு போட்ட அரசாணை தற்பொழுது மழை நீர் வடியாமல் ஒட்டுமொத்த தமிழக மக்கள் சிக்கித்தவிக்கும் சூழ்நிலை இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. இந்த ஆக்கிரமிப்புக்கு கம்யூ., கட்சிகளும் பேராதரவு வழங்கியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு அரசு டிசம்பர் 30ம் தேதி வெளியிட்ட அரசாணை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசாணையில் நிர்வழி புறம்போக்கு நிலங்கள் என வகைப்படுத்தி 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருப்பவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் நீர் நிலை புறம்போக்கு என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்கள் அரசுக்கு தேவைப்படாத நிலம் தான் என உறுதி படுத்திக்கொண்டு பட்டா வழங்கலாம் என அரசு அறிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஏரிகள், குளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்து விட்டன.

இதனை மக்களுக்கு வெளிச்சம் காட்டும் வகையில் மா.கம்யூ., சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கொரட்டூர் ஏரிப்பகுதியில் சுமார் 3400 வீடுகள் உள்ளன. ஏரிப்பகுதிகளை ஆக்கரமித்துள்ள இவர்களுக்கு பட்டா வழங்கி முறைபடுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கி முழு பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் பட்டா வழங்க முடியாது என அதிரடியாக உத்தரவிட்டது.

வழக்கு விவரம்: நீர் நிலைகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாததால், அதனை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இது தொடர்பாக, வட சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு செயலாளர் டி.கே.சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக வருவாத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில், ஆக்கிரமிப்புகளை வரைமுறைப் படுத்துவதற்காக, அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதற்கு,  2007-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.   

இந்த அரசாணைப்படி,  சென்னையில் மட்டும் சுமார் 40,000 பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். பின்னர், இந்தத் திட்டம் 2009-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த உத்தரவுக்கு பின்னர், ஏரியை ஆக்கிரமித்து இருந்தவர்களும் பட்டா கேட்டு விண்ணப்பித்த பிறகு, துப்பணித்துறையினர் ஏரியிலிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பினர்.

அவ்வாறு ஏரிகளில் ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பகுதியில் கொரட்டூர் ஏரியும் ஒன்று. இது தவிர, சென்னை குடிநீர் வாரியமே அந்த ஏரியில் கழிவுகள் கலப்பதால் அங்குள்ள நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என அறிவித்துள்ளது. தவிர, ஏரியைச் சுற்றி எந்த விவசாயப் பணிகளும் நடைபெறுவதில்லை.

மேலும், கொரட்டூர் ஏரி பகுதியில் சுமார் 3,400 வீடுகள் உள்ளன. அதில் 900 வீடுகளுக்கு பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே, கொரட்டூர் ஏரிப்பகுதியில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு 2006-ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்கி, ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முழு பெஞ்ச் விசாரித்து உத்தரவிட்டது. அதில், ’ நீர் நிலைகளில் கோடை காலத்தில் நீர் இருப்பு குறைந்து போகும். மழைக்காலங்களில் மீண்டும் நீர்மட்டம் உயரும். அதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாத நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்தலாம் என அரசு கருதி உள்ளது. ஆனால், அவ்வாறான ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் ஏன் பயன்படுத்தாத நிலைக்கு தள்ளப்பட்டன என்பதை அரசு கருத்தில் கொள்ள தவறிவிட்டது. அதை ஆராய்ந்தால், பல நீர்நிலைகள் மனிதர்களால் பயன்படுத்தாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்தச் செயல் திட்டமிட்டே அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டதும் தெரியவரும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பல்வேறு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த உத்தரவுகள் அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளவர்களை ஊக்கப்படுத்தவதாக உள்ளது. எனவே, நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன என்ற காரணத்துக்காக அங்கு ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கமுடியாது என்று கூறி, மீண்டும்  இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, வாழ்க்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை கொளத்தூரில் உள்ள காந்தி நகர், கண்ணகி நகர், என்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டா கேட்டு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ’நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லை என்பதற்காக, அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிடங்களுக்கு பட்டா வழங்க உரிமை கோர முடியாது. ஏரி புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, 2006 ஆம் ஆண்டு அரசாணைப்படி பட்டா வழங்க முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் ஏரிகள் பட்டா போட்டு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, கொளத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், பட்டா கேட்டு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

பசுமைத் தீர்ப்பாய விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீர்நிலைகள் வறண்டாலும், அவற்றை வேறு எந்த தேவைக்காகவும் மாற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்திரகுமார் பேசும் போது, “அண்மைக் காலமாக நீர்நிலை கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இவை நீதிமன்றத்தில் வழக்காக வரும்போது, நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க நேர்கிறது. இதனால் வாழ்நாள் முழுதும் சேமித்த பணத்தைக் கொண்டு, நீர்நிலைகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குவோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், கிராம அளவில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம்” என்றார்.

நீர் போராட்ட கதைகள்-கருப்பூர் தாய் ஏரி மீட்பு

சேலம் மாவட்டம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட, கருப்பூர் பனங்காடு ஏரி, 30க்கும் மேற்பட்ட, கிராமங்களின் நீராதாரமாக, அப்போது விளங்கியது. சேலம், ஏற்காடு மலையில் இருந்து வரும் நீரானது, மேக்னசைட் பகுதிகளின் வழியாக, கருப்பூர் பனங்காடு ஏரிக்கு வந்து சேர்ந்தது.

கருப்பூர், மீர் சமுத்திரம் ஏரி, குள்ளக்கவுண்டனூரில் உள்ள சமுத்திரம் ஏரி, மாங்குப்பை ஏரி, செல்லபிள்ளை குட்டை, முத்துநாயக்கன் பட்டி ஏரி, பழையூர் ஏரி உள்ளிட்ட, சுமார் 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின், பிறப்பிடமாக விளங்குவதால், கருப்பூர், பனங்காடு ஏரியை, அப்பகுதி மக்கள், "தாய் ஏரி' என்று அழைக்கின்றனர்.இது, 30க்கும் மேற்பட்ட ஏரிகளின் வழியாகச் சென்று, பல்வேறு கிராமங்களின் நீராதாரமாக விளங்கி, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பட்டு கடைசியில், பூலாம்பட்டி ஏரியில் கலந்து, காவிரி ஆற்றில் கலக்கும். அந்த காலத்தில், சேலத்தின் குடிநீர் தேவையை தீர்க்க, பனங்காடு ஏரியில் உள்ள தண்ணீரை, சேலத்திற்கு கொண்டு வர, திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மேக்னசைட் வெட்டி எடுக்க தொடங்கினர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொடங்கி, இன்று வரை, ஏறக்குறைய, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, மேக்னசைட் எடுக்கப்பட்டு வருகிறது. மேக்னசைட் நிறுவனம், இப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், ஏற்காட்டில் இருந்து வரும் நீர் வழிகளையும் சிதைத்தது.இதன் விளைவாக, ஏற்காட்டில் இருந்து வரும் நீர் சிறிது, சிறிதாக குறைந்து, கடந்த, 32 ஆண்டுகளுக்கு முன், தாய் ஏரிக்கு நீர் வருவது நின்று போனது. இதன் எதிரொலியாக, தாய் ஏரியின் கிளை ஏரிகளும் முழுமையாக வறண்டு விட்டது. நீர் வழிப்பாதையை சரி செய்து, ஏரியை சீரமைக்க, கருப்பூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து, பல்வேறு போராட்டம் நடத்தியும், எவ்வித பலனும் இல்லை.

இன்று இப்பகுதி, 1,000 அடிக்கு மேலே, ஆழ்துளை கிணற்றில், "போர்' போட்டாலும், நீர் இல்லை என்ற நிலைக்கு மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த, 2008ல், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை கொண்டு, "கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பின் மூலம், ஆர்.டி.ஓ., தாசில்தார், கலெக்டர் ஆகியோருக்கு தொடர்ச்சியாக மனு அனுப்பபட்டது. அவர்களும் வந்து பார்வையிட்டு, சரி செய்து கொடுப்பதாக, வாக்குறுதி கொடுத்துச் சென்றுள்ளனர்.ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், பல்வேறு உண்மைகளையும், மேக்னசைட் பகுதியில் சட்ட விரோதமாக, ஆக்கிரமிப்பு செய்து அழிக்கப்பட்டிருப்பதையும், வெளிக்கொணர்ந்தனர். இதன் பின்னர், செயில் நிறுவனம், தன் தவறுகளை திருத்திக் கொள்ள, முன் வந்தது. அதன்படி, ஏரியை சீரமைக்க, செயில் நிறுவனம் தன்னுடைய இயந்திரங்களை, இலவசமாக கொடுத்தது.

கருப்பூர் விவசாயிகளும் செலவை ஏற்றுக்கொள்ள, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் அழிந்து போன, நீர் வழிகளை கண்டுபிடித்தனர். அதன் பிறகு, இந்தியாவிலேயே முதன் முறையாக, கனிம பகுதியில், நீரோடை சீரமைக்கும் பணி தொடங்கியது. கடந்த, ஆறு மாதங்களாக, கருப்பூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தினர் கடுமையாக உழைத்தனர்.இந்த கடின உழைப்பின் பலனாக, கடந்த சில நாட்களாக, தொடர்ந்து பெய்த கோடை மழையால், தற்போது, செயில் நிறுவன, எல்லை முடிவில் உள்ள தடுப்பணை, முழுமையாக நிரம்பி, கருப்பூர் தாய் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இது திட்டமிட்ட வேலையில், வெறும், 25 சதவீதம் மட்டுமே, முடிவடைந்த நிலையில், தற்போது நீர் வந்தள்ளது.இந்த நீரோடை, ஏற்காடு அடிவாரத்தில் உள்ள, சிறு குறு நீரோடைகளுடன் இணைக்கப்படுதல், அழிந்த ஓடைகளை திரும்ப உருவாக்குதல் போன்ற, 75 சதவீதம் பணி மீதம் இருக்கிறது. இந்தப்பணி முழுமையாக முடிவடைந்தால், தாய் ஏரி, தன் அனைத்து பிள்ளைகளுக்கும், நீர் வழங்குவதோடு, காவிரிக்கும் நீர் தருவாள் என்பதில் ஐயமில்லை.

ஏரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், விஜயராகவன் உள்ளிட்ட, 15 உறுப்பினர்கள் கூறியதாவது:ஏரி பாதுகாப்பு இயக்கம் மற்றும் சேலம் மக்கள் குழு, விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து இப்பணிகளை மேற்கொண்டோம். மீதமுள்ள, 75 சதவீதம் பணி தொடந்து செய்ய, செயில், டான்மேக், டால்மியா ஆகிய அனைத்து நிறுவனங்களும், தங்கள் பகுதியில் உள்ள விதிகளை மீறி அழிக்கப்பட்ட ஓடைகளை சரி செய்ய வேண்டும். மேலும், இது போன்று உள்ள கிராமங்களில் பொதுமக்களாகவே, களத்தில் இறங்கி, ஏரிகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

400 ஏக்கர் பாசன வசதி : சேலம், கருப்பூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள, "தாய் ஏரி' 58 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கிருந்து செல்லும் நீர், 30க்கும் மேற்பட்ட கிளை ஏரிகளின் வழியாக சென்று, பூலாம்பட்டியில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கிறது. தாய் ஏரி மூலம், கருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 கி. மீட்டர் தொலைவில், 400 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. செயில் நிறுவன எல்லையில் உள்ள, 6 அடி உயரம் தடுப்பணை மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம், அங்குள்ள விவசாய பகுதிகளுக்கு, மழை இல்லாத காலங்களிலும், பாசன வசதி கிடைக்கிறது.

நன்றி: தமிழ்மித்ரன்

சட்டங்களும் தீர்ப்புகளும்-தாம்பரம் 5 ஏரிகள்

 தாம்பரம் தாலுகாவில் 5 ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அளவீடு மற்றும் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதாக தேர்தலின் போது அமைச்சர் சின்னையா வாக்குறுதி அளித்தார். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ மழை கொட்டி தீர்த்தபோது, தாம்பரம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில ஏரி உடைந்ததாலும், உபரிநீர் வெளியேறியதாலும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளானார்கள். பெரும்பாலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள்தான் இதுபோன்ற பாதிப்புக்கு காரணம் என அனைவரும் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து தாம்பரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரிகள், தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தாம்பரம் வருவாய் துறை சார்பில் அறிக்கை தயாரித்து, மாவட்ட கலெக்டருக்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கீடு மற்றும் அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. தாம்பரம் நகராட்சி எல்லையில் உள்ள சேலையூர், இரும்புலியூர், தாம்பரம், கடப்பேரி, புலிக்கொரடு ஆகிய 5 பெரிய ஏரிக்கரைகளின் நீளம், அகலம் எவ்வளவு, அவைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்கள் எவ்வளவு என கணக்கெடுக்கப்பட்டது.



மேலும் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறும் வழி, கலங்கல் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளவை கல் வீடுகளா, குடிசைகளா, கடைகளா, வணிக வளாகங்களா என்ற ரீதியிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது, அமைச்சர் சின்னையா, ‘‘ஏரி பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்’’ என உறுதியளித்தார். 

அவர் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு அதை செய்யவில்லை. ‘‘உள்ளாட்சியில் திமுகவினரே அதிகளவில் உள்ளனர். அதனால் நாம், எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வையுங்கள்’’ என்று உள்ளாட்சி மன்ற தேர்தலின்போது அமைச்சர் சின்னையா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதை நம்பி உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் அதிமுகவை பொதுமக்கள் வெற்றி பெற வைத்தனர். அதற்கு பிறகும் ஏரி பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.



இந்நிலையில், தற்போது ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கணக்கீடு மற்றும் அளவீடு பணி நடப்பதால் இங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். அதே நேரத்தில், ஆளுங்கட்சி மீதும் குறிப்பாக அமைச்சர் சின்னையா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வார்டுகளான ஏரி பகுதிகள்

தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. அவற்றில் கடப்பேரி ஏரியில் 1, 2, 4, 5, 6, 7, 8 இரும்புலியூர் ஏரியில் 25, 26,27, சேலையூர் ஏரியில் 22, 23, தாம்பரம் ஏரியில் 28, 29, 30, 34 ஆகிய வார்டுகள் உள்ளன. சில வார்டுகள் பாதி அளவு ஏரியின் வெளிப்புறம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மாடி, குடிசை, கடைகள், வணிக வளாகங்கள் என பல்வேறு கட்டிங்கள் இந்த ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

நன்றி: தினகரன்

ஏரிகள் ஆக்கிரமித்தால் அமைச்சர் வாக்குறுதி கூட செல்லாது

சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள் 1400 பேருக்கு நோட்டிஸ் அனுப்பட்டது. 

சட்டங்கள் தீர்ப்புகள் - ஒழலூர் ஏரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டத்தினால் ஒழலூர் ஏரியில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீட்டுமனைப் பிரிவுகள் அகற்றப் பட்டன.மாற்றப்பட்ட பகுதி தற்போது மாவட்ட நிர்வாகத்தால் நீர்பிடிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த ஒழலூர் கிராமத்தில் 196 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி புதுப்பாக்கம், ஒழலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த ஏரியை, நீர்வள நிலவளத் திட்டத்தில் சீரமைக்க மாவட்டநிர்வாகம் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பிவைத்திருந்தது.



இந்நிலையில் இந்த ஏரியின் நீர் பிடிப்புப் பகுதியில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் நிலத்தை ஒருசிலர் முறைகேடாக பட்டா பெற்று வைத்திருந்தனர்.கரடு முரடான பகுதியை இயந்திரங்களை வைத்து சமன் செய்து கல்நட்டு வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இதற்கு சில அரசு அதிகாரிகளும் துணை போனார்கள். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சிறப்பு அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவை அனுப்பி ஆய்வு செய்து விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து, ஏரியில் போடப்பட்டுள்ள வீட்டுமனைகளை காலி செய்து, ஏரியைப் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏரியில் பட்டா இல்லாத இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இருந்த போதிலும் ஏரியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டுமனைகளையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஏரியை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்தனர். அதனடிப்ப டையில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன் பிறப்பித்துள்ள அரசு ஆணையில் ஒழலூர் புதுப்பாக்கம் ஏரியில் முழுமையாக அளவீடு செய்து தணிக்கை செய்யப்பட்டபோது அதில் எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லை என்றும் மேற்படி ஏரியை ஒட்டியுள்ள பட்டாநிலங்களில் நீர் நிரம்பும்போது நீரால் சூழப்பட்டு காணப்படும் என்றும் மேற்படி பட்டா நிலங்கள் யுடிஆர் திட்டத்திற்கு முந்தைய பதிவுகளில், ஏரிநீர் முழுக்கடை, என பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் மேற்கண்ட நிலங்களை நீர் முழுக்கடை (நீர்பிடிப்பு) பகுதியாக பதிவு செய்ய வேண்டும் என்று நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகள் சங்கம் வரவேற்பு

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேருவிடம் கேட்டபோது ஏரியில் வீட்டுமனைகளாக மாற்ற முயன்ற இடத்தை நீர்பிடிப்பு பகுதியாக ஆவணங்களில் பதிவு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நீர்பிடிப்பு பகுதியில் பட்டா வைத்துள்ளவர்கள் நீர்பிடிப்பு இல்லாத நேரத்தில் விவசாயம் செய்யமுடியும்.அந்த இடத்தில் கட்டிடங்கள் உருவானால் ஏரிக்கான வரத்துக் கால்வாய்கள் துர்ந்து ஏரி முழுமையாக ஆக்கிரமிக்கப்படும். எனவே இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. மேலும் மாவட்டம் முழுவதும் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து நீர்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


சட்டங்கள் தீர்ப்புகள் - வரி செலுத்துவோர் சங்கம்

பிப் 26 2016

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படக்கூடாது என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது.

2015ம் ஆண்டு சிவகாசியை சேர்ந்த வரி செலுத்துவோர் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழக அரசு இது தொடர்பாக ஏராளமான அரசாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் ஆனால் தொடர்ந்து அரசு பட்டா வழங்குவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்த போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பிற்கு எப்படி பட்டா வழங்கலாம் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் வெள்ளிகிழமை விளக்கமளிக்கப்பட்டது.

அதில் கடந்த 2007ம் ஆண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதிலுக்குப் பிறகு, இனிமேலும் எந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கும் பட்டா வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற தலமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

நன்றி: தினமலர்