Monday 17 October 2016

நீர் போராட்டக் கதைகள்-ரோசல்பட்டி

'பாக்கெட்டில் பாலும்
பாட்டிலில் வாட்டரும்
ஃபாஸ்ட் ஃபுட்டும் சாப்பிட்டு
கான்கிரீட் சிறைகளில் வாழும்
கார்டு ஹோல்டர்கள்
ரிங் டோனில் கேட்கிறார்கள்,
நதியின் கீதம்’
-இன்றைய எதார்த்தத்தின் மீது எச்சில் துப்புகிறது, கவிஞர் இளங்குமரனின் இந்தக் கவிதை.
உண்மைதான். ஒரு காலத்தில் கிராமங்களில் சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை நீச்சல் தெரியாதவர்கள் இருந்ததில்லை. காரணம், ஆறு, ஏரி, கண்மாய், குளம், குட்டை, கிணறுகள்... என நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் இருந்தன. இன்றோ... 'விரிவாக்கம்' என்கிற பெயரில் நீர் நிலைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. நகரத்துவாசிகள் செயற்கைக் குளங்களில் மல்லாந்து கிடக்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்களுக்குத்தான் நீச்சல் பழக நீர் நிலைகள் இல்லாமல் போய் விட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்குள்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள் உருவாகியுள்ளன.
'ஆறுகளில் குளித்த ஆனந்தக் குளியல், கிணறுகளில் மீன்களாய் துள்ளிக் குதித்து மகிழ்ந்த நாட்கள்... போன்றவை நாற்பது வயதைக் கடந்தவர்கள் நினைவுகளில் இன்றைக்கும் நிழலாடும். எங்கே போயிற்று அந்த ஆனந்தம்? நாம் அனுபவித்த அந்த ஆனந்த அனுபவத்தை நமது சந்ததிகள் அனுபவிக்க வேண்டாமா? ஓடும் நீரில், உடலை மிதக்கவிட்டு, மனச்சோர்வை மறக் கடிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் பெற வேண்டாமா?'
பலரின் இந்த ஆதங்கத்தில் உண்மையிருக்க லாம். ஆனால், ஆதங்கம் மட்டுமே அனைத்துக்குமான தீர்வாகி விடுவதில்லையே? நீர் நிலைகளில் நீர் இல்லை எனப் புலம்பு வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. மாறாக, அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். முதற்கட்டமாக, தூர்ந்து போன கிணறுகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம்.
சுற்றுலா தலங்களுக்குச் சென்றுதான் கோடை விடுமுறையைக் கழிக்க வேண்டும் என்பதில்லை. எத்தனையோ விடுமுறைகளை பயணங்களில் போக்கிவிட்டோம். இந்த ஒரு விடுமுறையையாவது பயனுள்ளதாக ஆக்கலாமே..! அதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால்போதும்!
நேற்று குப்பைத் தொட்டி... இன்று குடிநீர்க் கிணறு!
'இது சாத்தியமா?’ எனக் கேட்பவர்களுக்கு, தங்கள் செயல் மூலமாக பதில் சொல்கிறார்கள், விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி பஞ்சாயத்து, குமாரபுரம் பொதுமக்கள். 60 வயதான குடிநீர்க் கிணறு ஒன்று இக்கிராமத்தில் இருக்கிறது. ரோசல்பட்டி, குமாரபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்திரா காலனி, ரங்கநாதபுரம், திடீர் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தாகத்தைத் தீர்த்த அந்தக்கிணறு... ஆழ்துளைக் கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு சீந்துவாரில்லாமல் போனது. இறைக்க, இறைக்க ஊறும் நீர், இறைக்காததால் கிடைநீராக மாறியது. பயன்பாடு அற்றுப்போய், சிறிது காலத்தில் ஊற்று அடைபட்டு வறண்டு, ஊர் குப்பைக் கூளங்களைச் சுமக்கும் 'மெகா சைஸ்’ குப்பைத் தொட்டியாக மாறிப்போனது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, குப்பைத் தொட்டியாக இருந்த அக்கிணற்றில் மீண்டும் தண்ணீரைக் கொண்டு வந்துள்ளனர், அந்தக் கிராமத்து மக்கள்.
ஊர் கூடி தேர் இழுத்தால் எளிதாக வந்து சேரும்!
''கிணத்தைத் து£ர் வாரச் சொல்லி அதிகாரிகங்ககிட்ட பல வருஷமா கேட்டும், மனு கொடுத்தும் எந்தப் பிரயோசனமும் இல்ல. இப்ப குடிதண்ணிக்கு கடுமையான தட்டுப்பாடு ஆகிப்போச்சு. 'இனி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை’னு முடிவு செஞ்சு, ஊர் மக்களே களத்துல குதிச்சுட்டோம். குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள்னு பத்து அடிக்கு கிணத்துல குவிச்சு கிடந்துச்சு. எல்லாத்தையும் வெளிய எடுத்த ரெண்டாவது நாளே லேசா தண்ணி ஊற ஆரம்பிச்சுது. அதைப்பாக்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அடுத்து நல்லா தூர் வாருனதுல, தண்ணி அதிகமா ஊற ஆரம்பிச்சுடுச்சு. மொத்தமே நாலு நாள் வேலைதான். ரொம்ப நாளா குப்பைகள் இருந்ததால முதல்ல ஊறுன தண்ணி சாக்கடை தண்ணி மாதிரி கலங்கலா இருந்துச்சு. அதையெல்லாம் மோட்டார் வெச்சு வெளியேத்திட்டோம். இப்போ நல்ல சுத்தமான தண்ணியா இருக்குது.
ஊரு வாலிப பசங்க, பள்ளிக்கூடத்து பசங்க, பெண்கள் எல்லாம் சேந்துதான் தூர் வாருனோம். உடல் உழைப்பைக் கொடுக்க முடியாத ஊர்க்காரங்க கொஞ்சப்பேர், டீ, சாப்பாடுனு வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. இனி, இந்தக் கிணத்துத் தண்ணியைத்தான் நாங்க குடிநீரா பயன்படுத்தப் போறோம். அதில்லாம, இனி எங்க ஊருக்கான எல்லா தேவைகளையும் முடிஞ்சளவுக்கு நாங்களே செஞ்சுக்கணுங்கிற முடிவுக்கும் வந்திட்டோம்''
-இப்படி தன்னம்பிக்கை பொங்க என்னிடம் சொன்னார் ரோசல்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலர் அன்னபூரணி.  
நன்றிக்கடன் செலுத்துங்கள்..!
இப்படி உங்கள் ஊரிலும் நிச்சயம் ஒரு கிணறோ, சிறிய குளமோ அல்லது குட்டையோ இருக்கும். அதை தூர் வாருங்கள். நீர் ஊறா விட்டாலும் பரவாயில்லை. வரும் மழைக் காலத்தில் அது மிகச் சிறந்த மழை நீர்ச் சேமிப்புக் கலனாக மாறும். அதன் மூலமாக, அக்கம்பக்கமுள்ள ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளின் நீர் மட்டமும் உயரும். அதல பாதாளத்துக்குச் சென்று விட்ட நிலத்தடி நீரை மேலே கொண்டு வர பலத்த கூட்டு முயற்சியும், கடின உழைப்பும் அவசியம் தேவை. கிராமங்கள் இழந்தவற்றை, நாம் தொலைத்தவற்றை, மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
நம்வீட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏதாவது பிரச்னை என்றால்... அப்படியே விட்டுவிடுவோமா என்ன? அதை சரி செய்யும் வேலையில் உடனடியாக இறங்குவோம்தானே! 'தனக்கு’ எனும்போது, சுறுசுறுப்பாக களத்தில் இறங்கும் நாம், 'பொதுவானது’ எனும் போது மட்டும் அக்கறை செலுத்தத் தயங்குவது எந்தவகையில் நியாயம்?

No comments:

Post a Comment